கரோனா தொற்று காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கு, பலரை வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது. இச்சமயத்தைப் பயன்படுத்தி, பலரும் தங்களது பொருள்களை இணைதளத்தில் விற்பனை செய்துவந்தனர். அரசியல்வாதிகளும் தேர்தல் பரப்புரையை இணையதளம் மூலம் மேற்கொண்டுவருகின்றனர்.
ஸ்மார்ட்போன் வருகையால், புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே குறைந்தது. மக்கள், பலரும் தங்களது நேரத்தை வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகளில் செலவிட்டுவந்தனர். தற்போது, அச்செயலிகள்தாம் நமது வாழ்க்கையை நிர்வகித்துவருகின்றன.
தற்போது, ஸ்மார்ட்போன் ஆன்லைன் வகுப்புக்குத் தேவை என்ற நிலைமை வந்ததால், குழந்தைகளும் அதிகளவில் ஆன்லைனில் நேரம் செலவிட்டுவருகின்றனர். இந்த டிஜிட்டல் ஆர்வம் பலரையும் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது. அதிக நேரம் ஆன்லைனிலே அமரும்போது, உடல் குறித்து சிந்தனை அறவே குறைகிறது. இது உடல் ரீதியான சிக்கலை அவர்களுக்கு ஏற்படுத்தும். டிஜிட்டலில் அதிக நேரம் இருப்பது, குழந்தையின் மனநிலையை எதிர்மறையாகப் பாதிக்கும் என்று உளவியலாளர்கள் கவலைப்படுகிறார்கள்.
ஸ்மார்ட்போன் உபயோகிப்பது குறித்து சிறுவர்களைப் பெற்றோர் கண்டிக்கையில், சில சமயங்களில் அது எதிர்மறையாக மாறக்கூடும். பல இடங்களில் சிறுவர்கள் தற்கொலைசெய்வது மட்டுமின்றி பெற்றோர்களைத் தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
டிஜிட்டல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளும், பெரியவர்களும்தான். எனவே, சமூக ஊடக பயனர்களைச் சரிபார்க்க அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உணர்ச்சி சமநிலை கற்பிக்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொலிகளைத் தணிக்கைசெய்ய சிறப்பு வாரியத்தை அமைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.