திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை குப்பையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், குப்பையில் இருந்த 10 மாத பெண் குழந்தையை மீட்டனர்.
இதையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின், ஆசிரியர் நகரில் உள்ள எஸ்ஆர்டிபிஎஸ் (SRDPS) பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டன.
இரண்டு, மூன்று மாதங்களுக்கு மேல் குழந்தை தொடர்பாக யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை எனில், குழந்தை தொடர்ந்து காப்பகத்தில் பராமரிக்கப்படும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், குழந்தையை யாராவது வீசிச் சென்றார்களா? அல்லது யாராவது கடத்தி விட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.