புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள கடையில் நேற்று முன்தினம் ரவுடி ஒருவர் மாமுல் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த காவலர், ரவுடியை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ரவுடி அந்தக் காவலரின் சட்டையை பிடித்து தாக்குகிறார். பின்னர் அங்கிருந்த நபர்கள் அவர்களை விலக்கி விடுகின்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. பின்னர் இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியாகி புதுச்சேரி முழுவதிலும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில், காவலரை தாக்கிய ரவுடி யார்? காவல்துறை ஆவணங்களில் அந்த ரவுடியின் பெயர் இல்லையா? காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கின்றது என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவுடிகளைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தங்களுடைய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து காவல் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். காவல் துறையினர் சுதந்திரமாக செயல்படுவதோடு மாவட்ட ஆட்சியருடன் இணைந்து சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.