கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியே சென்று வாங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை மீறும் வகையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.
இதையும் மீறி சிலர் தேவையின்றி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் சுற்றி வருகின்றனர்.
இதனையடுத்து, மாநகரம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைத்துள்ள காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அயனாவரத்தில் ஆய்வாளர் நட்ராஜ் தலைமையில் காவலர்கள் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுக கட்சிக் கொடியுடன் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், காரில் பயணித்த நான்கு பேரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நான்கு மதுபான பாட்டில்களையும், வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஊரடங்கால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடியிருக்கும் நிலையில், அவர்களுக்கு எப்படி மதுபானங்கள் கிடைத்தன என்பது குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 2,963 புகார்கள்!