சியோல் : தென் கொரியாவில் நாய் கறி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் சட்டவிரோதமாக நாய் கறி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 2 முதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வழி வகை செய்கிறது.
விரைவில் நாடாளுமன்ற கேபினட் கவுன்சில் மற்றும் அதிபர் யூன் சுக் யோலின் ஒப்புதலை பெற்ற பின் மசோதா சட்டமாக இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டு வருகிறதோ அந்த அளவுக்கு எதிர்ப்பு குரல்களும் எதிரொலித்து வருகின்றன.
நாய் கறி என்பது கொரிய தீபகற்பத்தில் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது. இருப்பினும் நாய் கறியை நுகர்வு மற்றும் உணவு பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு அண்மைக் காலமாக தென் கொரியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பல்வேறு தரப்பினரும் நாய் கறி நுகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாய் கறி உற்பத்தி, நுகர்வு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மசோதா தென் கொரிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு 208 ஆதரவு வாக்குகள் பதிவான நிலையில் ஒரு எதிர்ப்பு வாக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. விரைவில் நாடாளுமன்ற கேபினட் கவுன்சிலுக்கு இந்த மசோதா அனுப்புவைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அங்கு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலின் ஒப்புதலுக்காக அனுப்பு வைக்கப்படும். அவரும் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மசோதா சட்டமாக இயற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : குஜராத் சர்வதேச மாநாட்டை கலக்க வரும் பறக்கும் கார் தொழில்நுட்பம்! இந்தியாவில் சாத்தியமா?