மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்பூட்னிக்-வி கரோனா தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த, பொலிவியா நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாக, ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஸ்பூட்னிக்-வி பரிசோதனை தரவுகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் கூறுகையில், "ஸ்பூட்னிக்-வி கரோனா தடுப்பூசிக்கு பொலிவிய அரசு அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் அந்நாட்டில் பலரது உயிர்கள் காக்கப்படும். அதேபோல், கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். லத்தின் அமெரிக்க நாடுகள் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை அங்கீகரிக்க முன்வர வேண்டும்" என்றார்.
ரஷ்யா நேரடி முதலீட்டு வாரியத்தின் சர்வதேச கூட்டாளி நாடுகளான இந்தியா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில், ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதனை பொலிவிய அரசு பெற வழிவகை செய்யப்படும்.
உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தாக பதிவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை அங்கீகரித்து, ரஷ்யா மட்டுமல்லாது, பெலாரஸ், செர்பியா ஆகிய நாடுகளும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: பைடனுக்கு எதிராக காய் நகர்த்திய ட்ரம்ப்: முடங்கிய சமூக வலைதள கணக்குகள்