கரோனா வைரஸ் நோயின் தாக்கம் சில நாடுகளில் குறைந்தாலும் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும் தொடர்ந்து பல நாடுகள் ஊரடங்கு விதிகளை திரும்பப் பெற்றுவருகின்றன. இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள விதிகளை உடனடியாக திரும்பப்பெற்றால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ராயன் கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில் நாம் இப்போது முதல் கட்டத்தின் மத்தியில் உள்ளோம். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற பெருந்தொற்று பல கட்டங்களாக தாக்கும். எனவே, முதல் கட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் வைரஸ் இந்தாண்டு இறுதியில் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது. விதிகளை உடனடியாக திரும்பப்பெற்றால் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கும்.
எந்நேரமும், வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், வைரஸ் பரவல் குறையும் என்ற எண்ணத்தில் இருந்துவிடக் கூடாது. வரும் மாதங்களில், வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
தொற்றுகள் அதிகம் பரவும் காலத்தில் இரண்டாம் கட்ட கரோனா நோய் பரவல் வந்தால், அதனைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகும். வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பொது சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மருத்துவ பரிசோதனைகளையும் ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி