மத்திய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்திய விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்துமாறு, அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யும், சீக்கியருமான தன்மன்ஜீத் சிங் தேசி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கைவிடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், விவசாயிகள் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று தவறாக பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்துக்கும் இரு அரசுகளும் முன்வந்து தீர்வுகாண வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான எந்தப் பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ என்று தெரிவித்தார்.
பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த உரையால் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் தேசி, ‘நமது பிரதமர் என்ன பேசுகிறார்? என்பதை உணர்ந்து பேசினால், நன்றாக இருக்கும்’ எனப் பிரதமர் போரிஸ் ஜான்சனை சாடி ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பிரிட்டனில் ஃபைசர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒவ்வாமை