காபூல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா-தாலிபான் அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆப்கனில் இருந்து அமெரிக்கப்படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அங்கு அதிபர் அஷ்ரஃப் கனியின் ஆட்சி வீழ்ந்து தாலிபான் பிடியில் ஆட்சி அதிகாரம் வந்தது.
அங்கு நிலவிய ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்ததால், சிவில் உரிமைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறும் வகையில் காபூல் 'ஹமித் கர்சாய்' சர்வதேச விமான நிலையத்தில் குவிந்தவண்ணம் இருந்தனர்.
அமெரிக்கா, ரஷ்யா அறிவிப்பு
இந்நிலையில், காபூல் விமானத்திற்கு வெளியே இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்க அலுவலர்கள் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்திருப்பதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
![காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு, KABUL AIRPORT BOMB BLAST UPDATE, bomb blast photos, bomb blast in afghan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12885805_afg1.jpeg)
பெண்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, விமான நுழைவாயிலுக்கு அருகே ஒரு மனித வெடிகுண்டும்; மற்றொரு வெடிகுண்டு அங்கிருக்கும் உணவகத்திற்கு அருகே வெடித்துள்ளது என்றும் உறுதிசெய்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.
மனித வெடிகுண்டு
இதையடுத்து, காபூல் விமான நிலையத்தின் வாயில் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த நிலையில், அதில் பலரும் உயிரிழந்திருப்பதாக ஆப்கான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
இக்குண்டுவெடிப்பு சம்பவ இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்தில் தான் இருந்ததாக கூறும் ஆதம் கான், குண்டுவெடிப்பினால் பலரும் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், காபூல் விமான நிலைய வாயில் அருகே வெடித்தது மனித வெடிகுண்டு என்றும், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு, KABUL AIRPORT BOMB BLAST UPDATE, bomb blast photos, bomb blast in afghan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12885805_afg2.jpeg)
இங்கிலாந்து முன்னெச்சரிக்கை
முன்னதாக, இங்கிலாந்து வெளியுறவுத்துறை ஆப்கானில் வசிக்கும் பிரிட்டன்வாசிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "ஆப்கனில் பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமாக உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு யாரும் செல்லாதீர்கள்.
விமான நிலையம் அதன் சுற்றுப் பகுதிகளில் வசித்தால், அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கிக் கொள்ளுங்கள். அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளியே வராதீர்கள்” என அறிவித்திருந்தது.