உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், பல முன்னணி நாடுகள் திணறுகின்றன. கரோனா பரவலில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்த வைரஸால், அமெரிக்காவில் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி முதற்கட்டமாக டெலாவேர் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டியானா கேர் மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடன் கரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதும், இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.
முதல் டோஸ் எடுத்துக்கொண்டு 3 முதல் 4 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் அளிக்கப்பட வேண்டும். அதன்படி ஜோ பைடன் நேற்று (ஜனவரி 11) கரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் இரண்டாவது டோஸை எடுத்துக்கொண்டார். அதுவும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.