உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது.
இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மற்ற நாடுகளைப் போல அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முடங்கிப் போன பல அமெரிக்க நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதன் எதிரொலியாக, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆனால், அந்நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு நிலை தலைகீழாக உள்ளது. பெருந்தொற்று காலத்திலும் அவர்கள் காட்டில் பண மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிவருகிறது.
அமெரிக்காவின் ஐந்து பெரும் பணக்காரர்களான, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பட், ஒராகில் நிறுவனர் லாரி லீசன் ஆகியோரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தலா 75.5 பில்லியன் டாலர் அல்லது 19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ATF, IPS ஆய்வு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து IPS இயக்குநர் சக் கோலின்ஸ் கூறுகையில், "பெருந்தொற்று காலத்திலும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்துள்ள செய்தி, சம்பளதாரர்களின் தியாகத்தை உணர்த்துகிறது.
லட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் தங்களின் உயிரை பணயம்வைத்து போராடிவரும் வேளையில், குறைபாடுள்ள பொருளாதார, வரி அமைப்பைப் பயன்படுத்தி பணக்காரர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர்" என்றார்.
மார்ச் 18 முதல் மே 19ஆம் வரையிலான காலகட்டத்தில் 600-க்கும் அதிகமான அமெரிக்கப் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மொத்தம் 434 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பொருளாதார இடைவெளியின் ஆபத்தான விளைவுகளை இந்தப் பேரிடர் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக ATF செயல் தலைவர் ஃபிராங்க் கிலமென்டே வேதனை தெரிவித்துள்ளார் .
இதையும் படிங்க : ஆகஸ்டிற்குள் வெளிநாட்டுப் பயணிகள் விமான சேவை?