சென்னை: வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி என்றும், ஆளுங்கட்சி என்றால் அமைதி காக்குமா தேர்தல் ஆணையம் என்றும் கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து மார்ச் 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரியில், பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் குழுக்கள் தொடங்கப்பட்டு பரப்புரை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும் எனவும், கைபேசி எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் கைபேசி எண்களைப் பெற்று பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகள் குறுந்தகவல் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணையக் கோரி பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், ஆதார் விவரங்களைப் பெற்று பரப்புரை செய்வது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இது சம்பந்தமாக மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எப்படி வாக்காளர்களின் கைபேசி எண்களை பெற முடிந்தது எனவும், அதை எப்படி பயன்படுத்தலாம் எனவும் கேள்வியெழுப்பினர்.
மேலும், நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ள தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி என்பதால் அமைதி காக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக மார்ச் 26ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.