கரோனா காலத்திலும் சாதிய கொலைகள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள், காவல் சித்ரவதை, குடியிருப்புகள் தாக்கப்படுதல், சாதி ரீதியாக இழிவுப்படுத்தி அவமானப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைகள் பட்டியலின மக்கள் மீது அதிகரித்துள்ளன.
கரோனாவைவிட கொடிய நோயான சாதிவெறி உயிர்ப்புடன் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேனியில் நடந்திருக்கும் சாதிய தாக்குதல் மேலும் பலரது வெறுப்பை உமிழச் செய்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (24). வேளாண் கூலித்தொழிலாளியான இவர், நேற்று (பிப். 16) காலை அப்பகுதியில் அமர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்துவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவரும் அமர்ந்து புகைப்பிடித்துள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், 'எனக்குச் சமமாக அமர்ந்து நீயும் புகைப்பிடிப்பதா?' எனச் சாதியின் பெயரைச் சொல்லி திட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பழனிச்சாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் அலெக்ஸ் பாண்டியனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நத்தை வேகத்தில் நகரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு