திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அடுத்த அரியநாயகி புரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (42). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்து ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள தனது கோழிப்பண்ணைக்கு நேற்று (பிப்.18) புறப்பட்டுச் சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்லத்துரையின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லத்துரை உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் பாதுகாப்பு கருதி செல்லத்துரை வீட்டு முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்கள், ஊர் பொதுமக்களும் திரண்டதால் பதற்றம் நிலவியது. இதுகுறித்த முக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் அவரது உறவினர்களே செல்லத்துரையை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு எதாவது அரசியல் காரணம் உள்ளதாக என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து