கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் அவர்களின் உத்தரவின்பேரில், கல்வராயன் மலைப்பகுதியில் காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு சாராய ஊறல்களை அழித்தும், சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
மரவள்ளிக்கிழங்கு செடிக்கு இடையில் முளைத்த கஞ்சா..
அந்த வகையில் சங்கராபுரம் வட்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், மது விலக்கு காவல் ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர் தனிப்படை அமைத்து கல்வராயன் மலை தாலுகா மூலக்காடு கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கலியமூர்த்தி (50) என்பவர் தனது விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிக்கு இடையில், 37 கஞ்சா செடிகளை பயிரிட்டிருந்தது தெரியவந்தது. அதைப்பார்த்த காவல் துறையினர் உடனடியாக கஞ்சா செடியினை பறிமுதல் செய்து, கலியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: '4,266 மதுபாட்டில்கள் அழிப்பு!'