காவேரிப்பாக்கம் வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நித்யா. இவர்களுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் அஸ்வினி(7) என்ற மகளும், தனுஷ்(4) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் பல மாதங்களாகவே தம்பதியினர் இணக்கமான சூழல் இல்லாததாகக் கூறப்படுகிறது. சங்கர் சென்னையில் சமையல் கலை நிபுணராக வேலை பார்த்து வருவதால் அவ்வப்போதுதான் சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
அந்த வகையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் சங்கர் சென்னை சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த நித்யா நேற்று, தனது மகள் அஸ்வினிக்கும், மகன் தனுசுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்படி காவேரிப்பாக்கம் காவல்நிலைய அலுவலர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உண்மையாகவே நித்யா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.