வேலூர்: பயன்பாட்டிலிருந்த இடுகாடு ஆக்கிரமிப்பு எனக் கூறி, அங்கிருந்த சமாதிகள் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி அடுத்த புதூர்மேடு மகிமண்டலம் கிராமத்தில் வாழ்ந்து வந்த பொதுமக்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியிலிருந்த இடுகாடு இடத்தை பயன்படுத்தி வந்தனர். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக்கூறி இடுகாடு முழுவதும் பொக்கலைன் இயந்திரத்தைக் கொண்டு தரைமட்டமாக்கி உள்ளார்.
இதில் மறைந்த பலரது சமாதி முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து ஒப்பாரி வைத்து அழுதனர். மேலும் மோகனிடம் இடுகாடு உள்ள இடத்தினை ஆக்கிரமிக்கக் கூடாது எனக் கேட்டுள்ளனர். ஆனால் மோகன் தனக்குச் சொந்தமான இடம் என்று அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
இதனால் கிராம மக்களுக்கும் மோகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மேல்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த இடுகாடு திடீரென ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.