வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (75). அவரது மனைவி மீனா (55). அவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் ராஜேந்திரன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 3.01.2015 அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (49) என்ற நபர், ராஜேந்திரன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன், மீனா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீனாவின் கழுத்திலிருந்த தாலி, கம்மல் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயன்றபோது, ராஜேந்திரன் சத்தம்கேட்டு எழுந்துள்ளார். இதையடுத்து அவர் தலைமீது சக்திவேல் கட்டையைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.
இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு மீனாவும் கண் விழித்துள்ளார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் தலையிலும் சக்திவேல் கட்டையைக் கொண்டு பலமாக அடித்ததில் இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரண்டு உயிரைக் கொன்ற பிறகும் தனது கொள்ளை வெறி அடங்காத சக்திவேல், மீனாவின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி, கம்மல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன் பின்பு இந்த கொள்ளை-கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 07.01.2015 அன்று ஆலங்காயம் பகுதியில் சக்திவேலைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று மாவட்ட மகிளா நீதிபதி எம்.செல்வம், குற்றவாளி சக்திவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ. 5,000 அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பு அளித்து உத்தர விட்டார்.
மேலும் படிக்க: பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை, கொலையாளி யார்? - விசாரணையில் காவல் துறை!