திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் மதிய உணவு அன்னதான திட்டத்தின் கீழ் அங்குள்ள மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரிக்குறவர் இன மக்களை அன்னதான மண்டபத்தில் அனுமதிக்க மறுத்து அவர்களை மண்டபத்திற்கு வெளியே தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அறிந்த திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் மோகன சுந்தரம் மற்றும் அதிகாரிகள் உத்தமர்கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அன்னதான மண்டபத்திற்கு உணவு அருந்த வந்த நரிக்குறவர் மக்களிடம் அன்னதான மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் பக்தர்களுக்கு உணவுகளை பரிமாறிய அவர் நரிக்குறவர் மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். ஆய்வின்போது செயல் அலுவலர்கள் மாதவன், ஜெய்கிஷன் மற்றும் ஹேமாவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உத்தமர் கோவில் அன்னதான மண்டபத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சியின் அடிப்படையில் தற்போது ஆய்வு செய்ததில் அது தவறான செய்தி என்பது தெரியவந்தது.
மேலும் கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் எவ்வித பாகுபாடுமின்றி இந்த அன்னதான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த மதிய உணவு அன்னதானத்தில் அனைத்து தரப்பினரும் பங்குகொண்டு உணவருந்தலாம்.
இதையும் படிங்க:ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்த யாசகப் பெண்!