திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி அருகே இந்திய ஓவர்சீஸ் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் எமிலிசோலா என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு எமிலிசோலா மரணமடைந்தார். இதனால் அவரது வங்கிக் கணக்கு நீண்ட நாட்களாகப் பண பரிமாற்றம் இன்றி இருந்துள்ளது.
ஆனாலும் அவரது கணக்கில் ரூ. 25 லட்சம் பணம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாகப் பண பரிமாற்றம் இல்லாததால் வங்கி அலுவலர்கள் எமிலிசோலா கணக்கை முடக்கினர். இந்நிலையில் எமிலிசோலா கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு இறந்த தகவல் வங்கி நிர்வாகத்திற்குத் தெரியவந்துள்ளது. இதையறிந்த வங்கி மேலாளர் உறையூர் நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த ஷேக்மொய்தீன் (58) என்பவரும், உதவி மேலாளராக பணியாற்றிய சின்னதுரை என்பவரும் சேர்ந்து எமிலிசோலா கணக்கில் உள்ள பணத்தைக் கையாடல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
‘அடக்குமுறையை மீறி போராட்டம் தொடரும்’ - முகிலன்
இதைத்தொடர்ந்து எமிலிசோலா வங்கிக் கணக்கைப் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல் புதிதாக ஏடிஎம் கார்டு கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி வங்கி கொடுத்த புதிய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எமிலிசோலா கணக்கில் இருந்த ரூ. 25 லட்சத்து 8 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
வாடிக்கையாளர் பணம் செலுத்த நேரடியாக வங்கிக்கு வராமல் ஏடிஎம் கார்டு மூலம் இவ்வளவு பெரிய தொகை எடுத்தது கணக்கு தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்து வங்கி மேலாளரும், உதவி மேலாளரும் மோசடி செய்து பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.