தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், சென்னை இந்திய தொழில்நுட்பம் நிறுவனம் ஆகியவை இணைந்து காணொலி காட்சி மூலம் கப்பல் போக்குவரத்துக்கான புதிய இந்திய மென்பொருளை வடிவமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் ராமச்சந்திரன், இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின்குமார் சிங், துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம், இந்திய தொழில்நுட்பம் நிறுவனம் சார்பில் முரளி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், 5 வருட பராமரிப்பு மற்றும் செயலியை வடிவமைப்பதற்கு செல்லுபடியாகும். மேலும் கூடுதலாக 5 வருடத்திற்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். இதன் மூலம், உள்நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்படவுள்ள கப்பல் போக்குவரத்துக்கான மென்பொருள் செயலியின் மூலம், கப்பல்களின் வருகையை கண்டறிதல், அடையாளம் காணுதல், கப்பல்களை கண்காணித்தல், கப்பல்களின் வருகையினை ஆய்வு செய்தல், கப்பல் கேப்டன்களுக்கு தகவலை சரியான வகையில் தெரியப்படுத்துதல், வானிலை ஆய்வு தகவல்களைத் தெரியப்படுத்துதல் போன்ற வசதிகள் இந்த செயலியின் சிறப்பம்சங்கள்.
இந்த செயலி 27 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது. இது குறித்து வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் பேசும் போது, "இந்திய பெருந்துறைமுகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன் முறையாக துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து, கடலோர தேசிய தொழில்நுட்ப மையத்தினால் கப்பல் போக்குவரத்துக்கான இந்திய மென்பொருள் வடிவமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மிகவும் பொருள் செலவுள்ள வெளிநாட்டு மென்பொருளை உபயோகிப்பத்தை விட உள்நாட்டில் உருவாக்கப்படவுள்ள இந்திய கடற்சார் வர்த்தகத்திற்கு பயன்படும் மென்பொருளானது பாதுகாப்பானது, நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்" என்று கூறினார். இந்திய தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும் போது, "இந்த மென்பொருள் செயலியை உருவாக்குவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து மற்றும் கடலோர தேசிய தொழில்நுட்ப மையம் பெற்றுள்ளது
இதே போன்ற கப்பல் போக்குவரத்தின் திறனை மேம்படுத்துவதற்கான மென்பொருள் செயலியை உருவாக்குவதற்கான முயற்சி கொல்கத்தா துறைமுகத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துறைமுக கடல்பகுதியின் ஆழத்தை கணக்கிடும் சூரிய மின்ஆற்றல் மூலம் செயல்பட கூடிய தானியங்கி படகுகளை உருவாக்கி உள்ளது ஒரு சிறப்பம்சமாகும். சர்வதேச கடற்சார் அமைப்பானது அனைத்து துறைமுகங்களிலும் கப்பல் போக்குவரத்தின் மென்பொருள் செயலியை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தானியங்கி அடையாள அமைப்பு, கண்காணிப்பு கேமரா, அதிக அதிர்வெண் கொண்ட தகவல் பரிமாற்ற கருவி, திசையை கண்டறியும் திசைமானி, அதிநவீன ரேடார் கருவி போன்ற கருவிகளிலிருந்து விவரங்களை சேகரித்து ஒருங்கிணைந்த வரைபடத்தில் கப்பல்களின் செயல்பாடுகளை காண முடியும்" என்றார்
இதையும் படிங்க:யாஷ் புயல் எதிரொலி: வேப்பேரியில் விசைப்படகு சேதம்