தூத்துக்குடி: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நரிக்குறவர் இன நாடோடிகளாய் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தாங்கள் குடும்பமாகச் செல்லும் இடங்களிலேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசி விற்றும், பச்சை குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர்.
நாடோடிகளாய் இருக்கும் இம்மக்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லாததால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருக்கின்றனர்.
அடையாள அட்டை வழங்க உத்தரவு
இந்நிலையில், சமீபத்தில் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாடு முழுவதும் நாடோடிகளாக வசித்துவரும் நரிக்குறவர்களுக்கு அடையாளம் உருவாக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்துவரும் 54 நரிக்குறவ குடும்பத்தில் தகுதியுள்ள 36 பேருக்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மூன்று தலைமுறை போராட்டத்துக்குப் பின், அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் அடையாள அட்டை என்பதால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை நரிக்குறவ குடும்பத்தினர் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.

முதன்முறையாக வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று (பிப்ரவரி 19), தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

முதன்முதலாக வாக்குரிமை பெற்ற நரிக்குறவ குடும்பத்தினர் 36 பேருக்கும் போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதன்படி காலை 9.30 மணிக்கு குடும்பமாக வந்திருந்த நரிக்குறவர் சமூகத்தினர் வரிசையில் நின்று தங்களது முதல் வாக்கைப் பதிவுசெய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளரிடம் கூறுகையில், தங்களுக்குப் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டுவந்த நிலையில் முதன்முறையாக இந்த வாக்களிக்கும் உரிமையை அரசு அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனவும், இதன் தொடர்ச்சியாகத் தங்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Local body election -2022:வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்