திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையிலான தனிப்படையினர் அடைக்காலபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் .
அப்போது அங்கு உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் கேரளா மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் (22), கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஹஸ்வின் (24), கன்னூர் தலைசேரி பகுதியைச் சேர்ந்த உம்னாஷ் (29) மற்றும் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் கொலுகண்டா பகுதியைச் சேர்ந்த சாய்கணேஷ் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த கார்களில் நான்கு மூட்டைகளில் சட்டவிரோதமாக 110 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் கடத்தி வந்த சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 223 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட 93 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் 773 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 72 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.