சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நல்லப் பழக்கங்கள், தீயப் பழக்கங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொம்மலாட்டம், விளக்க உரைகள் பெண் குழந்தைகளின் மத்தியில் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாத நிகழ்வு சேலத்தில் இன்று நடைபெற்றது.
இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசவுந்தரி; மகளிர் அமைப்பு , தொழிலாளர் இயக்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.
இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுத் தலைவர் ராஜகோபால் கூறுகையில், 'பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்படுத்திட வேண்டும்' எனக் கூறினார். மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் அரசுப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இவ்விழாவினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி துணை காவல் துறை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி!