மதுரை: கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடந்த பணி நியமனங்கள், பொருள்கள் கொள்முதல், தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள், ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து ஆவின் நிறுவன அலுவலர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், ஆவினில் உள்ள அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு தயாரிப்பதற்காக 15 ஆயிரம் கிலோ நெய் அனுப்பியது தொடர்பாக தணிக்கையில் ஆவணம் இல்லாதது குறித்தும், தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக போலியான ஆவணங்கள் மூலமாக நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல், மதுரை ஆவின் நிறுவனத்தில் ஊழியர்கள் தேர்வு, பால், நெய், வெண்ணெய் உற்பத்தி ஆவணங்களில் திருத்தம், ரசீதுகளில் மோசடி, நூதன தரக்கட்டுப்பாடு மோசடி என பல குற்றச்சாட்டுகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: Sugar Mill workers strike: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பணியாளர்கள் 14ஆவது நாளாகப் போராட்டம்