மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் பிரச்னை தொடர்ந்து களத்தில் நிற்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதனால்தான் அனைத்து தேர்தலிலும் போட்டியிடுகிறோம். இதில் திமுக, அதிமுக என்பது தேர்தலை எந்தளவிற்கு நேர்மையாகச் சந்திக்கிறது என்பதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும். சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஒரு தொகுதிக்கு எவ்வளவு வாக்குகள் வாங்கினோம், அதனைவிட அதிகமாக தற்போது வாங்கிவிட்டோமா, அப்படி என்றால் முன்னேறுகிறோம், வளர்கிறோம், அதனையே நாங்கள் பார்க்கிறோம்.
காஷ்மீரை ஒன்றிய பிரதேசமாக அறிவித்ததில், எங்களுக்கு உடன்பாடில்லை. சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்தது யார்? முதலில் அப்படி என்றால் அது காஷ்மீரில் மட்டும்தான் உள்ளதா? இன்று மிசோரத்தில் உள்ளது. கோவா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 371 உள்ளது. காஷ்மீரில் இருக்கும் சிறப்பு அந்தஸ்து இருப்பதுபோல, ஹிந்தி மொழிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை எடுக்க வேண்டும்.
ஒரு மாநிலத்திற்கு எதற்குச் சிறப்பு அந்தஸ்து என்று கேட்கும் நீங்கள் ஒரு மொழிக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் அதனைத் திருப்பி எடுங்கள். கோயில்களில் பிராமணர்கள் மட்டும்தான் பூஜை செய்ய வேண்டும் என்று கூறும் சிறப்பு அந்தஸ்தை எடுங்கள் எல்லோரும் செய்யலாம் என்று கூறுங்கள். அதுதான் சரியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்கள் குடியேறியுள்ளார்கள். இந்த ஆண்டு அது போல ஜம்மு-காஷ்மீரில் பலபேரைக் குடியேற்றுவார்கள். அங்கும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு. ஆனால் அங்கு யாருக்குக் கிடைக்கும். அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்குமா? இஸ்லாமியர்களுக்குக் கிடைக்கப்போகிறதா? அப்போது இவர்கள் குடியேற்றுபவர்களுக்குத்தான் கிடைக்கும்.
சென்னையை ஒரு ஒன்றிய பிரதேசமாக மாற்றி வட மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து கூறுபோட்டு தமிழக ஒற்றுமையை எதிர்த்து ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து போராடுபவர்களைப் பிரித்துப்போட்டால், எளிதாக அவர்கள் உள்ளே நுழையலாம் என திட்டமிடுகிறார்கள்” என்றார்.