தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 19ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ’உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை.
இந்த அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மறைமுகத் தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'நந்தா' பட பாணியில் வெங்காயம் திருடி, பணம் வாங்கிச் சென்ற நபர் கைது!