மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர் பி உதயகுமார் போட்டியிடுகிறார். திருமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூடக்கோவில், கொக்குளம் பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அவருடன் இணைந்து அவரது மகள் பிரியதர்ஷினியும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அமைச்சர், "கரோனா காலகட்டத்தில் எங்கள் உயிர் போனாலும் உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீடு வீடாக வந்து நேரடியாக பலமுறை வழங்கியுள்ளோம். அதன் அடிப்படையில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்" என்றார்.
அவரை அடுத்து பேசிய அவரது மகள் பிரியதர்ஷினி, "நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளையும் அமைச்சரும் எனது தந்தையுமான ஆர்.பி.உதயகுமார், கரோனா காலத்தில் ஓடோடி உதவிகள் புரிந்தார். ஆகையால் அதனை மனதிற்கொண்டு திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதி மக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.