மதுரை அருகே குலமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 479 பயனாளிகளுக்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை பேசிக் கொண்டிருக்கிறார். பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிட மாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.
என் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா?உண்மைக்குப் புறம்பாக பேசிவரும் அண்ணாமலை மீது புகார் அளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பத்திரப்பதிவு துறையின் நிர்வாகம் மிக சிறப்பாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் போலியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் 3 லட்சம் பேர் வணிக வரி செலுத்தாமல் உள்ளனர், அவர்களிடம் வரி வசூல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை 7 மாதங்களாக குடியரசு தலைவர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். தமிழக அரசு கொண்டு வந்த அந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடியும்' - சென்னை மேயர் பிரியா