மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளருக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில், மதுரையில் இயங்கி வந்த இருதயம் அறக்கட்டளை (தனியார் அமைப்பு) இரண்டு குழந்தைகளை கரோனா தொற்றால் உயிரிழந்ததாகக் கூறி விற்பனை செய்தனர். அதையடுத்து காவல்துறை விசாரணையில், இரண்டு குழந்தைகளும் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த அறக்கட்டளையினர் அனுமதி இல்லாமல் முதியோர்கள், குழந்தைகளை அடைத்து வைத்தது, போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் முதலமைச்சர் விருது பெற்றது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் சிவகுமார் தலைமறைவாகி உள்ளார். எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். அத்துடன் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.