சென்னை: சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாணவர்களுக்கு மாத்திரைகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவிலேயே முதன்முறையாக குடற்புழு நீக்க மாத்திரைகள் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தர தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் இதே பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. பிறகு 2011ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தை தமிழ்நாடு முழுமைக்கும் விரிவாக்கம் செய்தார். 2014-ம் ஆண்டு ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் நடைபெறவிருக்கிறது. அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று ஒரே நாளில் 1,16,887 மையங்களில் வழங்கப்படுகிறது. அரசுப்
பள்ளிகள் 46,138 தனியார் பள்ளிகள் 12,201 அரசுக் கல்லூரிகள் 2,109 அங்கன்வாடி மையங்கள் 54,439 ஆக மொத்தம் 1,16,887 மையங்களில் மாத்திரைகள் தர தொடங்கப்பட்டுள்ளது. 1,30,000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.
2642 மருத்துவர்களுக்கு பணிநியமனம்
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசுகையில், “அரசு மருத்துவர்கள் பணிநியமனத்திற்காக ஜனவரி 5ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, டாடா கன்சல்டன்சி மூலம் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 24,000 மருத்துவர்கள் தேர்வில் கலந்து கொண்டு, தற்போது கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் என 2642 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 4585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் சாதிவாரி இடஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் பொறுத்தவரை பொதுப்பிரிவு 61, பிற்படுத்தப்பட்டோருக்கு 55, முஸ்லிம்களை பொறுத்தவரை 52, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 53, ஆதிதிராவிடர் பிரினருக்கு 51, அருந்ததியினர் பிரிவினருக்கு 48, பழங்குடியினர் பிரிவினருக்கு 45
என்கின்ற வகையில் கட் ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பணிநியமனம் செய்யப்பட உள்ள மருத்துவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. முதல் முறையாக பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அவரவர் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இல்லை என்பதற்கான மகத்தான சூழல் முதல்முறையாக உருவாக இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு 1021 மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அவர்களுக்கும் முதன்முறையாக கலந்தாய்வு நடத்தி எங்கெங்கு காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ள 20 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. 20 மாவட்டங்களில் அவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் போது அவர்களுக்கு சொன்னது எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பணிமாறுதல் கேட்டு சிபாரிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருந்தோம்.
இதையும் படிங்க: நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றம் தமிழ்நாட்டில் தான் அதிகம்...ஜெயக்குமார் விமர்சனம் - FORMER MINISTER JAYAKUMAR CRITICIZE
ஒரு வருடம் கண்டிப்பாக மருத்துவர்களை பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களுக்கு ஒரு வருடம் முடிவுற்றிருக்கிறது. அவர்களுக்கு 15ஆம் தேதி 1021 மருத்துவர்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மருத்துவர்களும், அவரவர் விரும்பும்
இடங்களுக்கே பணியாற்றுகின்ற சூழல் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.