சென்னை: தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கலவர பூமியாகும்: இந்த கலந்தாய்வு கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ்,"மேடையில் உள்ள நாங்கள் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளோம். சமூகநீதி என்ற கருத்தின் அடிப்படையில் இங்கு ஒன்றுகூடி உள்ளோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார்.
தமிழ்நாட்டில் விரைவாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தின் மூலம் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை உள்ளது. 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பிரச்னை என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். 69 சதவிகித இட ஒதுக்கீடு 50 சதவிகித இடஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்.
தமிழகம் மட்டும் மறுப்பது ஏன்? தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள், ஆமைகள் என்றெல்லாம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமூகங்களின் நிலை குறித்தும் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் அதன் அடிப்படையில் அரசு திட்டங்கள் தீட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா - அமைச்சரவை ஒப்புதல்!
இது குறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கிறது. பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் சாத்தியம்தானே. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக முதல்வர் மட்டும் சொல்லி வருகிறார். சட்டமன்றத்திலும் அதே கருத்தைப் பேசுகிறார். மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளது. அதனோடு சேர்த்து இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள சில சமூகங்களை சேர்ந்தோரில் யாருமே ஐஏஎஸ் அதிகாரியாகவோ, ஐபிஎஸ் அதிகாரியாகவோ , மருத்துவர்களாகவோ இல்லை. அப்படியானால் தமிழகத்தில் சமூகநீதி எங்கே உள்ளது? பிறகு எப்படி அந்த சமுதாயங்கள் முன்னேறும்? தமிழ்நாட்டில் எங்கெங்கு எந்தெந்த சாதி எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது என்ற புள்ளி விவரம் திமுகவிடம் உள்ளது. எந்த தெருவில் எந்த சாதியினர் உள்ளனர்? எந்த வீட்டில் எத்தனை சமூகத்தினர் உள்ளனர்? என்ற விவரங்களை திமுக வைத்துள்ளது. அந்த விவரங்களை சமூக நீதிக்காகப் பயன்படுத்தாமல் ஓட்டுக்காக மட்டும் திமுக பயன்படுத்துகிறது.
பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்துவிடும். அதன் பிறகு அந்தந்த சாதியினர் தேர்தலில் போட்டியிட கூடுதலாக தொகுதி கேட்பார்கள். கட்சியில் அதிகமாக மாவட்ட செயலாளர்கள் கேட்பார்கள் என்பதால் தான் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கிறது.
பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. மேலும் பிராமணர்கள், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதற்கு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகும் முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல கட்டப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்,"என்றார்.