மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர் ஹரிஸ்வர்மன். இவர், தனது சேமிப்பு பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை, கரோனா நிதியாக வங்கி வரைவோலை மூலமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ள சிறுவன், கரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் ஹரிஸ்வரதன் கூறும்போது, "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருசக்கர வாகனம் வாங்க சிறுக சிறுக உண்டியலில் பணம் சேமித்து வைத்திருந்தேன். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.
எனது அப்பாவிடம், என்னிடம் உள்ள சிறு சேமிப்பு தொகையை கொண்டு உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அப்பாவின் ஆலோசனையோடு ஸ்டாலின் தாத்தாவிற்கு எனது சேமிப்பு பணத்தை அனுப்பினேன்" என்றார்.
இது குறித்து சிறுவனின் தந்தை இளங்கோவன் கூறியபோது, "கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் நாள்தோறும் தொலைக்காட்சிகளில் கார்ட்டூன் உள்ளிட்டவைகளை பார்த்து வந்த ஹரிஸ்வரதன் சில நேரங்களில் எங்களுடன் சேர்ந்து செய்திகளை பார்ப்பது வழக்கம்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செய்திகள் வரும்போது அதைப் பார்த்து வேதனை அடைந்த ஹரிஷ், அவர்களுக்காக ஏதேனும் உதவி செய்ய என்னிடம் ஆலோசனை கேட்டான். அவனின் சேமிப்பு பணத்தை வழங்க நான் கூறியதை அடுத்து இந்த முடிவை நாங்கள் எடுத்தோம்" என்றார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் தான் இருசக்கர வாகனம் வாங்க சிறுக சிறுக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.