ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மேட்டூரிலிருந்து ஆசிட் பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 25ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரியின் முன்பக்க அச்சு முறிந்து நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்த ஆசனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியிலிருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்துச் சீரானது.
இதன் காரணமாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு காரணமாக 4 மணிநேரம் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் கடும் குளிரால் சிரமத்துக்குள்ளாகினர். யானை, சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்ல முடியாமல் தவித்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்: இன்று ‘டெண்டர் பழனிசாமி’ என்று ஸ்டாலின் விமர்சனம்!