ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் இருந்து 30 கிமீ தூரத்தில் அடர்வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹாடா கிராமம். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள இக்கிராமத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரியில் இருந்து தினந்தோறும் பவானிசாகர் வழியாக இருபேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் இக்கிராமத்தில் இருந்து பவானிசாகர், ஈரோடு, ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்ல மக்கள் பேருந்தை மட்டுமே நம்பியுள்ளனர். குறிப்பாக பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா வழித்தடத்தில் 20 தாழ்வான பள்ளங்களை கடந்து வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில் பவானிசாகர் அணை தற்போது முழுகொள்ளளவை எட்டியுள்ளதால் அணைநீர் பள்ளங்களில் புகுந்து 3 அடி உயரம் வரை தேங்கியுள்ளது. இதனால் பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான்கு தினங்களுக்கு முன்பு தண்ணீர் தேங்கியுள்ள ஊசி பள்ளம் என்ற இடத்தை பேருந்து ஒன்று கடந்த போது தண்ணீரில் சிக்கி பழுதாகி நீண்ட நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
இதனால் பள்ளங்களில் அணைநீர் வடியும் அரசு பேருந்துகள் இயக்க இயலாது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி குழந்தைகள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் மருத்துவ வசதி கேட்டு அக்கிராமத்த்சை சேர்நத 100 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட மக்கள் 4 லாரிகளில் தெங்குமரஹாடாவில் இருந்து வந்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சத்தியமங்கலம் - கோபி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வனஅலுவலர் அருண்லால் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க :தரமற்ற சாலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!