சென்னை: மேடவாக்கம் அடுத்த சித்தாலபாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமிபிரியா. இவர் இளம் வயதில் கணவரை இழந்த நிலையில் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வருகிறார். கடந்த 2009 ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இடம் பார்க்க வந்த சிவகுமார் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு 2010ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவரும் நிலையில், சிவக்குமார் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது தெரிந்து இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்ததுள்ளது.
மனைவி கடத்தல்: இந்த பிரச்சனை முடிக்க பாஜக பிரமுகர் சிவக்குமார் அவரது மனைவியை கடத்த திட்டம் தீட்டி அதற்கு அவரது நண்பர்களை அழைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் (செப்.28) மாலை லட்சுமிபிரியா கோயிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். லட்சுமி பிரியா வீட்டின் வெளியே கார் வந்து நின்றதும் காரை விட்டு கீழே இறங்குவதற்குள் ஒரு காரில் வந்த லட்சுமிபிரியாவின் கணவர் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வலுகட்டாயமாக இழுத்து அவரிடம் இருந்த காரின் சாவி பறித்து, கத்திமுனையில் அடித்து காரில் கடத்திச் சென்றுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் போலீசார் அவர்களை பள்ளிக்கரணை அருகே மடக்கி பிடித்து கடத்தப்பட்ட லட்சுமி பிரியா மற்றும் அவரது மகன் ரூபேஷ் ஆகியோரை மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விடைபெற்ற சீசர்; மோப்ப நாய் சீசருக்கு ஓய்வு..யாழினி நாய்க்கு வரவேற்பு!
பின்னர் இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்து சென்ற பெரும்பாக்கம் ஆய்வாளர் சண்முகம், பாஜக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்குப்பதிவு செய்ய மறுத்து மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு போகச்சொல்லி பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கிடைக்க சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எனது கணவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது தெரிந்தும் 14 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு அவரோடு வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் தன்னை வேண்டாமென்று கூறி விரட்டியடித்ததால் அவரை விட்டு செல்ல முடிவெடுத்து, நான் அவருக்கு தொழில் செய்ய கொடுத்த ரூ. 90 லட்சம் மற்றும் 500 கிராம் தங்க நகை உள்ளிட்டவற்றை திருப்பி கேட்டேன்.
இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தோம். அதனுடைய பங்கையும் கொடுக்க வேண்டும். மேலும், என்னை கடத்திச் சென்றபோது எடுத்துச் சென்ற 5 சவரன் தங்க நகை, கார் மற்றும் நான் கொடுத்த பணம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும். அலுவலகத்தில் இருந்து வரும் சம்பளம் கடந்த மூன்று மாதமாக வரவில்லை. அதனையும் பெற்று தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய ஆய்வாளர் சண்முகத்தை அறிவுறுத்தியதன் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டதாக கூறபடுகிறது. இந்நிலையில், லட்சுமிபிரியாவுை 10க்கும் மேற்பட்டோர் அடித்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்