கோயம்புத்தூர்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் - மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சரத்குமார், "தற்போது அரசு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைச் சிறப்பாகவும், சீராகவும் நடத்தி முடித்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். முழுச் செயல்பாடுகள் குறித்து கருத்துகளைச் சொல்ல இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும்.
ஆனால் தற்போதைய ஆட்சி - சட்டப்பேரவையைச் சிறப்பாக ஒரு ஜனநாயக முறையில் நடத்தி முடித்துள்ளதற்கு ஒரு சான்று. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை நேரடியாக மக்களுக்கு நல்லது செய்தவர்கள் அவர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே, அந்தந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் போட்டியிடலாம் எனத் தெரிவித்துள்ளேன். அதை ஏற்று பல்வேறு இடங்களில் மனு தாக்கல்செய்துள்ளனர். எந்தெந்தப் பகுதிகளில் மனு தாக்கல்செய்துள்ளார்கள் என்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்த நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தற்போதைய அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதேபோல மூன்றாம் அலை வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்றால் வருந்த வேண்டாம்.
தங்களது கணக்குகளைக் காட்டிக்கொள்ளலாம் தவறில்லை. கொடநாடு தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் வேண்டாம் என்பதை எதிர்ப்பவன் நான். விசாரணை என்பது நாட்டின் ஜனநாயகம்.
முதலில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்குச் சென்று தன்னை நிரூபிக்கலாம். அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
நிரபராதியாக இருந்தால் விடுவிக்க வேண்டும். நீட் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்பது எனது கருத்து, வேளாண் சட்டத்தைப் பொறுத்தளவில் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. எனவே இதை ஒன்றிய அரசு ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். அதேபோல தனித்து இயங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுகின்றன.
ஆனால் அரசியலில் அப்படியில்லை. சாதிய அமைப்புகள் இருக்கலாம். அது வெறியாக மாறக்கூடாது. அப்போதுதான் சமத்துவமாக இருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் கனமழை - கழிவுநீர் கால்வாயில் கால் வைத்தவர் மாயம்!