கோயம்புத்தூர்: கோவை- பொள்ளாச்சி சாலையில் இயங்கும் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் அதிவேகமாகவே இயக்கப்படுகின்றன. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த SRK என்ற தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பேருந்து முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இராண்டு பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இருசக்கர வாகனம் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்கியது. இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழல் நிலவியது.
காயமடைந்தவர்களுக்கு அப்பகுதி இருந்த பொதுமக்கள் முதலுதவி அளித்தனர். இதனிடையே பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரை வாகன ஓட்டி ஒருவர் அவரது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், போக்குவரத்து காவல்துறையினர் அதிவேகமாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் போராடத்தூண்டியவர் கைது!