கோயம்புத்தூர்: இந்திய பாரம்பரியக் கலைகளில் களரிப்பயட்டு ஒரு முக்கியக் கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப்பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி, 2020-21ஆம் ஆண்டிற்கான போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பதக்க வேட்டை
போட்டிகளின் முடிவில், மெய்பயட்டு பிரிவில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர் சீனிவாசன் தங்கப் பதக்கமும், பத்மேஷ் ராஜ் வெள்ளிப் பதக்கமும், அரவமுதன், மாணவிகள் அக்ஷயா, வினோதினி ஆகிய மூவரும் வெண்கல பதக்கங்களும் வென்றனர்.
உருமி பிரிவில் மாணவர் பிரசன்னா வெள்ளி பதக்கமும், கெட்டுகரி பிரிவில் சீனிவாசன், லோகேஷ் ஆகியோர் வெண்கப் பதக்கங்களும் வென்றனர். சுவாடு பிரிவில் இன்பத் தமிழன் வெண்கலம் பதக்கம் வென்றார். இதன் மூலம், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஈஷா சம்ஸ்க்ரிதி
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா சம்ஸ்க்ரிதியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இசை, நடனம், யோகா ஆகியவற்றுடன் சேர்த்து சாகசக் கலையான களரியும் கடந்த 13 ஆண்டுகளாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 4*400 கலப்புத்தொடர் ஓட்டம்: உலகத்தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழர்