கோவை: தடாகம் சாலை காளையனூரில் வாட்டர் கம்பெனியில் நேற்று(அக்.06) சிறுத்தை ஒன்று அங்கிருந்த ஆடுகளை தாக்கியதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை உள்ளதா என கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காளையனூர்- திருவள்ளுவர் நகர்ப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில் மலை அடிவாரத்திலேயே சிறுத்தை அமர்ந்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் காளையனூர் மட்டுமல்லாமல் சோமையனூர், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டு வைத்து, சிறுத்தையை விரைந்து பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
![மலையடிவாரத்தில் தென்பட்ட சிறுத்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-leopard-visu-tn10027_07102022104224_0710f_1665119544_555.jpg)
மலையடிவாரத்திலேயே சிறுத்தை இருப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் ஊருக்குள் புகலாம் எனவும், எனவே வனத்துறையினர் விரைந்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஊரில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்; கண்டுகொள்ளாத காவல்துறை