சென்னை: அசோக் நகரை சேர்ந்த தம்பதியினர், தங்களது +2 படிக்கும் மகளுக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அந்த இளைஞர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், இசைக் கச்சேரிகளில் இசைக் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்து வருவதாகவும், கச்சேரிகள் இல்லாத நாட்களில் தனியார் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியும், இளைஞரும் ஐந்து வருடம் நட்பாக பழகிவந்ததும், நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதில், மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, பலமுறை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவி வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், மாணவிடம் பலமுறை பணம் கேட்டு வாங்கியுள்ளார். திடீரென மாணவியிடம் லட்ச கணக்கில் பணம் கேட்டுள்ளார். அதற்கு மாணவி பணம் கொடுக்க மறுத்ததால், அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, விசாரணையில் இளைஞர் ஒப்புக்கொண்டார்.
இளைஞர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பாலியல் தொல்லை - விருதுநகரில் 10 மாதங்களில் 11 பேர் மீது குண்டாஸ்