சென்னை: மயிலாப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுந்தர்ராஜா (31). இவர் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபிக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 14-ஆம் தேதி சுந்தர்ராஜா olx-இல் இணையதளத்தில் செல்போனை வாங்க தேடிய போது, 3 ஐபோன் 11,700 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே காவலர் சுந்தர்ராஜா விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் பணத்தை அனுப்பியுடன் அடுத்த நாள் செல்போனை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சுந்தர்ராஜா அவரது வங்கி கணக்கிற்கு 11,700 ரூபாயை செலுத்தினார். பல நாள்கள் ஆகியும் செல்போன் டெலிவரி செய்யப்படாததால் சுந்தர்ராஜா அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆகி இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த சுந்தர் ராஜா சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று (மார்ச்.19) புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சூளைமேடு காவல்துறையினர் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் மோசடி நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடிய போது, சூளைமேடு திருவள்ளூவர்புரம் பகுதியில் காண்பித்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்போன் தருவதாக கூறி மோசடி செய்த நபரை கைது செய்து கைது விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் காளிதாஸ் (23) என்பதும், இவர் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டீலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்த காளிதாஸ் வாடகைக்கு குடோன் ஒன்றை எடுத்து future traders என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் காளிதாஸ்சிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் ஸ்லிப்புகள் மற்றும் 6 ஏடி.எம்கார்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதே போல எத்தனை நபர்களை காளிதாஸ் ஏமாற்றி உள்ளார், வேறு யாரிடமாவது தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை மீறி பைக் சாகசம் - போலீஸ் விசாரணை