சென்னை: நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்தார்.
- இ-டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு அளித்துள்ள முக்கியத்துவம்.
- அஞ்சல் அலுவலகங்கள் வங்கிகள் இணைந்து செயல்படும் வகையில், அஞ்சலக கணக்கிலிருந்து வங்கிக் கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதியளித்து புதிய திட்டம்.
- இ-பாஸ்போர்ட் திட்டம்
- ஒரே நாடு, ஒரே பதிவுத் திட்டம் - நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை
- 2025-க்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி
- இந்திய மதிப்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்
- கிராமங்களில் எலக்ட்ரிக் சார்ஜர்
- பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
கிரிப்டோ கரன்சி வேறு, டிஜிட்டல் கரன்சி வேறு
இ-டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் கரன்சி குறித்து சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வினோத் ஆறுமுகம் நம்மிடம் கூறுகையில்,
"கிரிப்டோ கரன்சியையும் இந்திய அரசு கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சியையும் நாம் குழப்பிக் கொள்கிறோம். கிரிப்டோ கரன்சி வேறு, டிஜிட்டல் கரன்சி வேறு. கிரிப்டோ கரன்சி என்பது குழுக்களாலோ, தனியார் நிறுவனத்தாலோ நடத்தப்படுகிறது. கிரிப்டோ கரன்சி என்பது முழுக்க முழுக்க ரகசியத்தன்மை கொண்டது.
அதனுடைய சந்தை என்பது நிலையில்லாதது. ஆனால் இந்திய அரசு கொண்டுவரவுள்ள டிஜிட்டல் கரன்சி கிரிப்டோ கரன்சி அல்ல. இந்திய அரசால் கொண்டுவருவதால் அது டிஜிட்டல் பேங்க் டிஜிட்டல் கரன்சி எனப்படும்.
டிஜிட்டல் கரன்சி என்பது இந்திய ரூபாய் மதிப்பை அப்படியே எடுத்துக்கொள்ளும். 100 ரூபாய் நோட்டை உருவாக்குவதற்குப் பதில் டிஜிட்டல் பணமாக, மாற்ற உள்ளனர். ஒரு 100 ரூபாய் நோட்டை உருவாக்க 130 ரூபாய் செலவாகிறது. இதுவே, நூறு ரூபாயை டிஜிட்டல் கரன்சி உருவாக்கினால் ஒரு ரூபாய்க்கும் கீழ் செலவாகும்.
டிஜிட்டல் கரன்சியிலும் சிக்கல்
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவருவதால், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இந்திய அரசும் மாற்றத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு ரூபாய் டிஜிட்டல் கரன்சி என்பது இந்திய ரூபாயின் மதிப்பு அப்படியே இருக்கும். கிரிப்டோ கரன்சி இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய அரசு கொண்டுவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம். ஆனால் இந்த டிஜிட்டல் கரன்சியில் சிக்கலும் இருக்கிறது.
உங்கள் பணத்தை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்கிறீர்களோ, அதேபோல டிஜிட்டல் கரன்சி உள்ள மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை சைபர் திருடர்கள் உங்கள் டிஜிட்டல் பணத்தை எடுத்தால் அவ்வளவுதான்.
உங்கள் செல்போன் தொலைந்துவிட்டால் அந்த டிஜிட்டல் கரன்சியை எப்படி மீட்பது குறித்து வழிமுறைகள் இன்னும் தெரியவில்லை. ஏனெனில், இந்திய அரசு டிஜிட்டல் கரன்சிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது.
மேலும், சைபர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மென்பொருள் தனியாகக் தயாரிக்கப்படும் என்றால், ஒரு சாமானியனுக்கு குறிப்பாக கிராமத்தில் ஒரு நல்ல செல்போன், தகுதியான தரம்வாய்ந்த இணையதளம் வேண்டும் என்பது இவர்களுக்கு டிஜிட்டல் கரன்சி கொண்டு சேர்க்க முடியாது. இது சாமானிய மக்களிலிருந்து தூரத்திற்குச் சென்றுவிடும்.
மேலும், இந்த டிஜிட்டல் கரன்சி குறித்து ஆர்பிஐ வழிகாட்டும் முறையை வெளியிடும். அதன் பின்னரே டிஜிட்டல் கரன்சிக்கான கட்டமைப்பு உருவாக்கப்படும். டிஜிட்டல் கரன்சி அறிவிப்பு என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். டிஜிட்டல் கரன்சி ஒரு ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உருவாக்கப்படும். கிரிப்டோ கரன்சிபோல் இருக்காது. இது முழுக்க முழுக்க ஆர்.பி.ஐ. வசம் இருக்கும்.
நைஜீரியா, சீனாவுக்கு அடுத்தது இந்தியா
தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் கிராமங்கள்தோறும் மிகக் குறைந்த செலவில் இணையதள வசதியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் டிஜிட்டல் கரன்சி சாத்தியப்படும்.
புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு டிஜிட்டல் கரன்சி வெளியிட்டால், அதாவது டிஜிட்டல் கரன்சி பெறுவதற்காகப் புதியதாக அலைபேசி அல்லது மடிக்கணினி வாங்குவது போன்ற சூழல் அமைந்தால் அது டிஜிட்டல் கரன்சி தோல்வியை உருவாக்கும்.
மேலும், கிரிப்டோ கரன்சி முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்திய அரசு டிஜிட்டல் கரன்சியை முதலீடாகப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி கிரிப்டோ கரன்சி முதலீட்டிற்கு அனுமதித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற, இறங்கத் தொடங்கிவிடும். மேலும், இது குறித்து முழுமையாகத் தெரிய வேண்டுமென்றால் டிஜிட்டல் கரன்சி குறித்து சட்டம் இயற்றினால் மட்டுமே தெரியவரும்.
குறைந்த அளவு இணையதளம், குறைந்த விலையுள்ள அலைபேசி உள்ளிட்ட மென்பொருள் வாயிலாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வசதி இருப்பவர்களுக்காக மட்டுமே உருவாக்கும் டிஜிட்டல் கரன்சியாக இருக்கக் கூடும். ஏனெனில், மக்கள் அனைவரும் டிஜிட்டல் கரன்சி பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை எளிமையாக்க வேண்டும் என்பதே அரசு யோசிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்