திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக 20 சென்டிமீட்டருக்கு அதிகமான மழை பெய்தது. இதனால் மிகவும் தாழ்வான பகுதிகளில் சுமார் நான்கு அடி அளவு மழை நீர் தேங்கிய நிலையில், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பகுதி, திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை, கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக சோழம்பேடு சாலை, கணபதி தெருவில் சுமார் ஒரு அடி அளவு தேங்கியுள்ள மழை நீரில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
அதன் பிறகு சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு, பெட்ஷீட், பாய், ஆவின் பால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணிகளுக்காக போடப்பட்ட தடுப்பு வேலிகளைத் தாண்டி கூடியிருந்த பொதுமக்களிடம் கைகொடுத்து நலம் விசாரித்து பொதுமக்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
அதன்பின் சோழம்பேடு தாமரை நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த ஒன்பது வயது நகுல் என்கிற சிறுவன், தான் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை வெள்ள நிவாரணத் தொகையாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார். அதனை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் அம்பத்தூர் வழியாக சென்னை புறப்பட்டார்.
இதையும் படிங்க: வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி: 6 மாவட்டங்களில் கனமழை