இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் நேற்று (ஏப்ரல் 30) இலங்கைக்கு சென்றுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய பாஜக கட்சியின் சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் கொழும்புக்கு சென்ற அவர், அங்கிருந்து நேற்று மாலை நுவரெலியாவிற்கு தனது விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அவரின் குழுவினர் வரவேற்றுள்ளனர்.
அதன்பின் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். நுவரெலியா கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள உழைப்பாளர் தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், மலையக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
அதன்பின் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர்கள் மத்தியில் கலந்துரையாட உள்ள அவர், மத்திய அரசு மூலம் கட்டப்பட்டு வருகின்ற பத்தாயிரம் வீடு திட்டங்களை பார்வையிடவுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்கள் தொடர் விடுமுறை?