சென்னை: தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 7ஆம் தேதி (நேற்று) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 21 ஆயிரத்து 623 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால், தமிழ்நாட்டில் இருந்து மேலும் 26 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 661 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால், தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 11 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டன. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் விவரம்: மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 37 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரோனா தொற்று பாதிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக அதே நிலையில் உள்ளது.
மேலும், சென்னையில் 12 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும், சேலம், திருவள்ளூரில் தலா இரண்டு நபர்களுக்கும், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனோ தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க: புதிய வகை கரோனா 'எக்ஸ்இ' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை