சென்னை: கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரை ரயில்வே காவல்துறியினர் கைது செய்துள்ளனர்.
ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைந்ததும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்றனர். அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில் நுழையும் போது வீடியோ எடுக்க சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணித்துள்ளனர். இதைப்பார்த்த ரயிலில் பயணிக்கும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உள்பட நான்கு மாணவர்களை ரயில்வே காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கும்மிடிப்பூண்டி எல்லாவூர் பகுதியைச் சேர்ந்த மாநில கல்லூரி மாணவர்களான அருள் மற்றும் இரண்டு சிறுவர்களும் கத்தியை நடைமேடையில் தேய்த்தபடி சென்றதும் மற்றொரு சிறுவன் அந்த ரயில்பெட்டியில் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த சிறுவனை பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்ப உள்ளதாகவும், இரண்டு சிறுவர்களை சீர்திருத்தப்பள்ளியிலும், ஒருவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலன்... காதலி எடுத்த விபரீதம்!