சென்னை: தமிழ்நாட்டு அறநிலையத் துறை சார்பில் திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் மூலதன செலவில் "திருக்கோவில்" என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலைய துறை பொது நல நிதியை, தொலைக்காட்சி துவங்க பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அறநிலைய துறை நிதியை பயன்படுத்தி, தொலைக்காட்சி தொடங்கப்படுவதாகவும், அறநிலைய துறையின் பொது நல நிதியில் இருந்து கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே நிதியை பெற முடியும் என வாதிடப்பட்டது.
தொடர்ந்து பொது நல நிதியை பயன்படுத்துவதாக இருந்தாலும் ஆட்சேபங்கள் கோர வேண்டும் எனவும், இந்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரி்விக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், எந்த விதிகளும் மீறப்படவில்லை எனவும் வாதிட்டார்.
கோவில்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால் தான் ஆட்சேபங்கள் பெற வேண்டுமே தவிர, தொலைக்காட்சி தொடங்குவது தொடர்பாக மக்களின் ஆட்சேபங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஏற்கனவே தொலைக்காட்சி தொடங்குவதை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு!