தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர், விஜயராகவன் (30). மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும், பெண் ஒருவர், விஜயராகவனின் கடைக்கு வந்து, மளிகை பொருள்கள் கேட்டுள்ளார்.
அதற்கு, ஏற்கனவே ரூ.4 ஆயிரத்து 500 கடன் பாக்கி இருப்பதால் அதை கொடுத்துவிட்டு பொருள்களை வாங்கி செல்லுமாறு தெரிவித்த விஜயராகவன் கடன் கொடுக்கவும் மறுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய அப்பெண், தன் கணவரான, மதன் (35) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடைக்கு சென்ற மதன் கடன் கொடுக்க மறுத்தது குறித்து விஜயராகவனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின் ஆத்திரமடைந்த மதன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து சென்று விஜயராகவனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் கையில் நரம்பு அறுந்து, பலத்த காயங்களுடன் மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயராகவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மதனை தேடி வருகின்றனர். மேலும் வியாபாரிகள் தாக்கப்பட்டது குறித்து, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையை சேர்ந்தவர்கள் உடனடியாக குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வேண்டும்- நியாயவிலை கடைகளுக்கு அறிவுறுத்தல்