கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பல தரப்பு மக்கள் வருமானம் இன்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது. ஊரடங்கு என்றவுடன் பல தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். அப்படிப் போகும் வழியில் சிலர் உயிரிழந்த அவலமும் நடந்தேறியது. கடந்த ஒரு மாத காலமாக வேலை, வருமானம் இல்லாமல், இங்கேயே தங்கியுள்ள மற்றத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த செம்பாக்கம் பகுதியில், 100-க்கும் அதிகமான ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக கடந்த ஐந்தாண்டுகளாகத் தங்கி கட்டட வேலை செய்துவருகின்றனர். தற்போது எந்தப் பணிக்கும் அனுமதி இல்லாததால், சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த சொற்ப பணமும் செலவாகிப்போன நிலையில், உணவுக்குக்கூட வழியின்றி வாழ்வின் பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இங்குள்ள தொழிலாளர்களுக்கு கட்டடத் தொழில் தவிர வேறேதும் தெரியாது என்றும், எனவே அரசு அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும், வெளிமாநிலத் தொழிலாளர்களின் ஒப்பந்ததாரர் கோரிக்கைவைக்கிறார். மேலும், ஊரடங்கு தருணத்தில் தகுந்த இடைவெளியுடன் கட்டடத் தொழில்கள் செய்ய அரசு அனுமதித்தால் இதுபோன்ற தொழிலாளிகளுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
மாநிலம் விட்டு மாநிலம் வந்து இடம் தெரியாமல், மொழிபுரியாமல், வேலை மட்டுமே தெரிந்த இவர்களுக்கு அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவரின் எதிர்பார்ப்பு.
இதையும் படிங்க: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!